எல்லாம் இறுதியில் பழகிப் போய்விடும் / ஞானக்கூத்தன் கவிதைகள்

எல்லாம் இறுதியில் பழகிப் போய்விடும்
நினைவில் உள்ளதா
ஏமாற்றத்தின் துரோக முட்கள்
உன்னைக் கிழித்த அம்முதல் நாளை
எப்படி உரக்கக் கூவினாய்! யாரோ
கூக்குரல் கேட்டு வருவார் என்பதாய்
எவ்வளவு விரைவில் தெரிந்து கொண்டாய்
பதிலில்லாக் கேள்வி உன் கூக்குரலென்று
கொஞ்சம் கொஞ்சமாய் பழகிப் போய்விடும்
எத்தனை குருதி பெருக்கினாய் முதலில்
அன்று குத்தப்பட்ட போது
இன்றோ உன்னை எங்குக் குத்தியும்
சொட்டுக் குருதியும் வெளிப்படவில்லை
கூச்சலும் இன்று தவிர்ந்து விட்டது

உனக்குத் தெரியும் கொலையின் நேரம்
காத்திருக்கிறாய். ஓரெரி கல்லாய்
உன்னை நோக்கித் தவறாது விரையும்
அசக்திக் கருவியின் கூர்முனை நோக்கி.
எதையும் ஒருநாள் ஏற்றுக் கொள்ளலாம்
அதனின் பிசுக்கைத் துடைத்த கையுடன்
திரும்பும் பொழுது எதிர்பாராமல்
இருளில் மழைக்குளத்தில்
இறங்கினாற் போல் இருக்கும் பொழுது.