எல்லாமும் முதலில் பாழாய் இருந்தது / ஞானக்கூத்தன் கவிதைகள்

எல்லாமும் முதலில் பாழாய்
இருந்தது கடவுள் சொன்னார்
தோன்றுக தெருக்கள் என்று

எழுந்தன தெருக்கள் பாழில்
வைத்தன நடனக் காலை
ஆடின தழுவிக் கொண்டு
இசைத்தன மூங்கில்க் கீதம்

ஊசிகள் சூர்யனாகித்
திரும்பின என்றாற் போல
எங்கணும் தெருக்கள் பாடிப்
பறந்தன. தெருக்கள் தாத்தாப்
பூச்சியாய்ப் பாழில் எங்கும்
திரிந்தன இடங்கள் தேடி

எல்லாமும் முதலில் பாழாய்
இருந்தது கடவுள் சொன்னார்
தோன்றுக தெருக்கள் என்று

கோடுகள் முதுகில் ரெண்டு
சுமந்திடும் அணிலைப் போல
போகிறேன் முதுகில் ரெண்டு
தெரு ஏறிக் குந்திக் கொள்ள