பிராண வேதனை – தனிமையின் ஆயிரம் இறக்கைகள் / குட்டி ரேவதி கவிதைகள்

விடாது ஒலிக்கட்டும் பேச்சிழந்த குரல்கள்
புலமெங்கும் காற்றுவீச மரங்கள் உரச
ஒலிகள் மோதிக் கலந்து பற்றி எரியட்டும்
உனது மொழியின் பிராண வேதனை

திடும்மென எழுந்த வெப்பத்தின் அதிர்ச்சியில்
பொசுங்காதிருக்கட்டும் உனது இறக்கைகள்
மேலெழுந்து உடலை இலேசாக்கி
ஒரு விண்கலத்தைப் போல மிதவையாக்கிச் சுழல்

சுழன்றுகொண்டே இருக்கட்டும் உனது உடல்
நடனத்தில் மூர்ச்சையுற்றுக்
கீழே விழாதிருக்க வேகமாய்ப் பயணி
இப்பொழுதும் தீ அணையாதிருக்கட்டும்
விடாது ஒலிக்கட்டும் பேச்சிழந்த குரல்களின்
பிராண வேதனை