பிரசவம் / குட்டி ரேவதி கவிதைகள்

நீர்ப்பாத்தியில் நிழலேதும் வேண்டாது

தாவர இச்சையின் மிடுக்குடன் எழும்

திரண்ட கவர்ச்சியின் வாழை யான்

குலைதள்ளும் நாளில்

வெட்டிச் சாய்த்தது உமது அரிவாள்

தோலுரித்தது உடல் கிழித்தது

என்றாலும் காலைச் சுற்றிலும்

கணுக்கால் உயரத்தில்

மீண்டும் மீண்டும் முளைத்தெழும்

என் கம்பீரத்தோகைகள்